சமையல் எண்ணெய், மளிகைப் பொருள்கள் விலை கடும் உயர்வு!
சென்னை: கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகரித்துள்ளது.
1 கிலோ பாமாயில் கடந்த வாரம் ரூ.39-க்கு விற்றது. இப்போது அது ரூ.42 ஆக உயர்ந்துள்ளது.
சன் பிளவர் ஆயில் ரூ.57-ல் இருந்து ரூ.59 ஆகவும், கடலை எண்ணெய் கிலோ ரூ.72-ல் இருந்து 74 ஆகவும், நல்லெண்ணெய் கிலோ ரூ.105-ல் இருந்து ரூ.110 ஆகவும், சாதா நல்லெண்ணெய் ரூ.60-ல் இருந்து ரூ.65 ஆகவும் உயர்ந்துள்ளது.
தேங்காய் எண்ணெய் கிலோ ரூ.70-ல் இருந்து ரூ.75 ஆகவும், சாதா தேங்காய் எண்ணெய் ரூ.60-ல் இருந்து ரூ.65 ஆகவும் உயர்ந்து விட்டது. வனஸ்பதி கிலோ ரூ.48-ல் இருந்து ரூ.52 ஆகியுள்ளது.
சர்வதேச மார்க்கெட்டில் எண்ணெய் விலை அதிகரித்ததால் விலை ஏறி வருவதாக கூறப்பட்டுள்ளது. பாமாயில், சன்பிளவர் ஆயில் போன்றவை மலேசியா போன்ற நாடுகளிலிருந்துதான் இறக்குமதியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் மட்டுமல்லாது, வெல்லம், மிளகு, பூண்டு போன்றவற்றின் விலைகளும் வெகுவாக உயர்ந்துள்ளது.
சேலம் வெல்லம் 1 கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.34 ஆகவும், வேலூர் வெல்லம் ரூ.34-ல் இருந்து ரூ.38 ஆகவும், அச்சு வெல்லம் ரூ.40-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்ந்துள்ளது.
மிளகு முதல் ரகம் கிலோ ரூ.190-ல் இருந்து ரூ.210 ஆகவும் 2-ம் ரகம் ரூ.160-ல் இருந்து ரூ.175 ஆகவும் ஏறி உள்ளது.
பூண்டு முதல் ரகம் ரூ.70-ல் இருந்து ரூ.90 ஆகவும், 2-ம் ரகம் ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது.