2 விநாடிகளில் விபத்து நேர்ந்து விட்டது - உயிர் பிழைத்தவர் தகவல்
மங்களூர்: இரண்டே விநாடிகளில் எல்லாம் நடந்து விட்டது என்று மங்களூர் விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த ஒருவர் இன்னும் அதிர்ச்சி விலகாத நிலையில் கூறியுள்ளார்.
அவரது பெயர் அப்துல் புத்தூர். மங்களூரில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிர் பிழைத்த வெகு சிலரில் இவரும் ஒருவர்.
விபத்து குறித்து அப்துல் புத்தூர் கூறுகையில், எல்லாம் 2 விநாடிகளில் நடந்து விட்டது. விமானம் விபத்தில் சிக்கியதும், அதன் இடது பகுதி திறந்தது. இதைப் பார்த்த நான் அதன் வழியாக கீழே குதித்து விட்டேன். என்னுடன் சேர்த்து மேலும் 2 பேரையும் வெளியில் இழுத்துப் போட்டேன். இதன் மூலம் நாங்கள் காயத்துடன் தப்ப முடிந்தது என்றார்.
புத்தூர் தற்போது கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மகேஷ் கூறுகையில், புத்தூரின் முழங்கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கீழே குதித்ததால் ஏற்பட்ட காயம் இது.
தன்னைப் போல ஐந்து பேர் உயிர் பிழைத்ததாக அவர் கூறினார். புத்தூர் மட்டும் 2 பேரைக் காப்பாற்றியுள்ளார். ஒருவருக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
அப்துல் புத்தூர் விமானத்திலிருந்து குதித்து தப்பியதை நேரில் பார்த்த மொஹைதீன் பாவா என்பவர் கூறுகையில், வி்மானம் விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த குளத்தை நோக்கி வேகமாக பாய்ந்து கொண்டிருந்தபோது ஒருவர் விமானத்திலிருந்து கீழே குதித்தார். காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.
விமானம் தரையிறங்கிய சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது.இதனால் விமானியால் விமானத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று நினைக்கிறேன். இறங்கியபோது வேகமாக வந்த விமானம் முதலில் ரேடார் கருவி மீ்து மோதி பின்னர் அருகில் இருந்த குளத்தை நோக்கி சென்று விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது என்றார்.