குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில்
சென்னை: குஷ்புவைத் தாங்குமா திமுக? என்ற கேள்விக்கு முதல்வர் கருணாநிதி நேற்று பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
ஊருக்கு ஊர் ஜெயலலிதா ஏதோவொரு காரணம் கூறி, தண்ணீர் கேட்டு, மின்சாரம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதைப் போல - சிறுதாவூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களை மீட்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் போராட்டம் நடத்தினால் என்ன?
தேதியை எதிர்பாருங்கள்!
'குஷ்புவை தி.மு.க. தாங்குமா?' என்று ஆனந்த விகடன் கேட்டிருக்கிறதே?
தி.மு.கழகம் தாங்குகிறதோ இல்லையோ? விகடன் அட்டைப் படம் தாங்கிக்கொண்டுதான் வெளிவந்திருக்கின்றது.
காங்கிரஸ்-தி.மு.க. அணி தமிழ்நாட்டு நலனுக்கு நல்லதல்ல என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா சொல்லியிருக்கிறாரே?
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தற்போது எதிர் அணியிலே இருக்கின்றது. இந்த நிலையில் அவர்களைக் கேட்டால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி- அ.தி.மு.க. அணிதான் தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது என்று தானே சொல்வார்கள்.
தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும், மக்கள் வரிப்பணம் பாழ் என்றும் ஒரு நாளிதழ் தணிக்கைத்துறை அறிக்கையின் அடிப்படையில் ஒரு முழு பக்கத்திற்கு கட்டுரை எழுதியிருக்கிறதே?
தணிக்கைத்துறையினரின் அறிக்கை ஒவ்வொரு ஆட்சியிலும் வெளியிடப்படும்போது அதிலே சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகள்தான் இந்த ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளன. அதைத்தான் அந்த நாளிதழ் பெரிதாக குறிப்பிட்டுள்ளது.
அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுவன அல்ல. மக்களுக்கு நலன் பயக்க வேண்டுமென்ற அடிப்படையில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. உதாரணமாக போக்குவரத்துக்கழகங்களால் பெருமளவு நட்டம் ஏற்படுவதாகவும், அரசாங்கம் ஏன் போக்குவரத்துக்கழகங்களை நடத்த வேண்டும், தனியாருக்கே தாரை வார்த்து விடலாமே என்றெல்லாம் அதிலே எழுதப்பட்டுள்ளது. பேருந்துகளை நாட்டுடமை ஆக்கியதே பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, லாபம் ஈட்டவேண்டுமென்ற எண்ணத்தோடு அல்ல. அதனால்தான் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் கட்டணங்கள் பல முறை உயர்த்தப்பட்ட போதிலுங்கூட, பேருந்துகளை அரசே நடத்துவதால் பேருந்து கட்டணங்களை உயர்த்தவில்லை.
தனியார் பேருந்துகளை நடத்தியிருந்தால் பெட்ரோல், டீசல் கட்டணம் உயரும்போதெல்லாம் பேருந்து கட்டணங்களையும் உயர்த்தியிருப்பார்கள். அது போலவே உணவு மானியம் ஏன், மின்சார மானியம் ஏன், இலவச டி.வி. ஏன் என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளார்கள். இதுபோன்ற நல்வாழ்வு திட்டங்கள் எல்லாம் ஒரு மக்கள் நலம் பேணும் அரசு விரும்பி செய்கின்ற பணிகளாகும். பேருந்துகளை இயக்கும்போது லாப நோக்கோடுதான் நடத்த வேண்டுமென்றால் கிராமங்களுக்கு பேருந்து வசதியே செய்து கொடுக்க முடியாது. பொதுத்துறை நிறுவனங்களில் கூட 2008-2009-ம் ஆண்டில் 38 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன என்பதுதான் உண்மை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.