ரூ.3,041 கோடிக்கு பேங்க் ஆப் ராஜஸ்தானை வாங்கும் ஐசிஐசிஐ!
இதன் மூலம் ஐசிஐசிஐ வங்கியின் கிளைகள் மேலும் 25 சதவிகிதம் விரிவடைகிறது. இந்த இணைப்புக்கென ரூ.3,041 கோடி தருகிறது ஐசிஐசிஐ.
இந்தத் தொகையை ரொக்கமாகச் செலுத்தாமல், பேங்க் ஆப் ராஜஸ்தானின் 118 பங்குகளுக்கு ஐசிஐசிஐயின் 25 பங்குகளைத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை ஐசிஐசிஐ வங்கியின் இயக்குநர்கள் குழு நேற்று வழங்கியது.
பேங்க் ஆப் ராஜஸ்தான் வங்கியின் புரமோட்டராக உள்ள பி கே தயாளுக்கு அந்த வங்கியில் 55.01 சதவீத பங்குகள் உள்ளன. இவற்றை அவர் ஐசிஐசிஐ வங்கிக்கு தருவதன் மூலம் ரூ.1,673 கோடியைப் பெறுகிறார். இணைப்புக்குப் பின் ஐசிஐசிஐ வங்கியின் 1.69 சதவீத (2 கோடி) பங்குகள் அவருக்குத் தரப்பட உள்ளது.
ஆனால் வங்கியின் நிர்வாகத்தில் எந்த மாறுதலும் இருக்காது. தயாளுக்குப் பொறுப்புகள் எதுவும் தரப்படாது என ஐசிஐசிஐ நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் தெரிவித்தார்.
அதேபோல, பேங்க் ஆப் ராஜஸ்தானின் எந்தப் பணியாளரும் நீக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.