மங்களூர் விமான விபத்து: 'டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர்' இன்னும் கிடைக்கவில்லை!
கருப்புப் பெட்டி என்பது உண்மையில் ஆரஞ்சு நிறத்திலான பெட்டியாகும். இது விமானத்தின் வால் பகுதியில் தான் வைக்கப்பட்டிருக்கும். தீ, நீர் உள்பட எதனாலும் அவ்வளவு சீ்க்கிரத்தில் பாதிக்கப்படாத அளவுக்கு கவசம் கொண்டது. கடலுக்கடியி்ல் கிடந்தாலும் அதைக் கண்டுபிடிக்க உதவும் டிரான்ஸ்மிட்டர்கள் அதில் உண்டு.
இதில் இரண்டு பாகங்கள் உண்டு. ஒன்று காக்பிட்வாய்ஸ் ரெக்கார்டர் (சி.வி.ஆர்.). இதில் விமானியின் அறையில் நடக்கும் பேச்சுக்கள் பதிவாகும். விமானிகளிடையிலான உரையாடல், விமானிகளுக்கும் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் இதில் பதிவாகும்.
இன்னொரு பகுதி டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் (எப்.டி.ஆர்.). இதில் விமானம் கிளம்பியது முதல் தரையிறங்கியது வரையிலான அத்தனை தொழில்நுப்ட விவகாரங்களும் பதிவாகும். விமானம் எந்த நொடியில் எந்த வேகத்தில் பறந்தது, எந்த உயரத்தில் பறந்தது, என்ஜின் உள்பட விமானத்தின் அனைத்துக் கருவிகளின் செயல்பாடுகள், அதில ஏற்பட்ட குறைபாடுகள் என விமானத்தின் அனைத்து விவரங்களும் பதிவாகும்.
இந் நிலையில் விபத்துக்குள்ளான போயிங் 737 விமானத்தின் சி.வி.ஆர். மட்டுமே கிடைத்துள்ளது. இதுவும் தீயில் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும் இதிலிருந்து விவரங்களை சேகரித்துவிட முடியும் என்று விமானப் போக்குவரத்துத்துறை டைரடர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனால், எப்.டி.ஆர். இன்னும் கிடைக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் கிடைத்தால் தான் விபத்துக்கான காரணத்தை முழுமையாக ஆராய முடியும்.