தென்மேற்கு பருவ மழை முன்னதாகவே தொடக்கம்?
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். முன்னதாக இம்மழை கேரளாவில் மையம் கொள்வது வழக்கம்.
ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக தென்மேற்கு பருவ மழை முன்னதாகவே தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.
கடந்த சில தினங்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை, புளியரை, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு வி்ட்டு பெய்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் கடந்த மே மாதம் 4ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுட்டெரித்தாலும், தென் மாவட்டங்களில் இடையிடையே மழை பெய்தது. வரும் 28ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைவதற்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
மேலும் தென்மேற்கு பருவ மழையை நம்பியே குற்றால சீசன் உள்ளதால் முன்னதாகவே கடைகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.