காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் கார்-நகைகள் கொள்ளை!
ராமநாதபுரம் எம்எல்ஏ அசன் அலிக்கு சென்னை நுங்கம்பாக்கம் நாகேஸ்வரா ரோட்டில் சொந்த வீடு உள்ளது. இதில் அவரது மகள் அஹானா குடும்பத்துடன் வசித்து வருகிறார். சென்னைக்கு அசன் அலி வரும்போது இந்த வீட்டில் தங்குவார்.
சட்டசபைக் கூட்டம் நடந்தபோது மனைவி ரம்லாவுடன் இங்கு தங்கியிருந்த அலி, தற்போது ராமநாதபுரம் சென்று விட்டார்.
அவரது மகள் கடந்த வாரம் குடும்பத்துடன் மலேசியா சென்று விட்டார். எனவே வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டின் போர்டிகோவில் மாருதி கார் மற்றும் ஒரு ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை டிரைவர் முகமது அப்துல் காதர் என்பவர் காரை எடுப்பதற்காக வந்தார். அப்போது கார் அங்கில்லை. ஆட்டோ மட்டுமே நின்றது. வீட்டின் கதவு திறந்து கிடந்தது. ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து கிடந்தன. வீட்டுக்குள் பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன.
இது பற்றி டிரைவர், எம்.எல்.ஏவின் மைத்துனர் அஷ்ரப் அலியிடம் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த டி.வி, லேப்-டாப், டி.வி.டி. பிளேயர், பீரோவில் இருந்த நகைகள் உள்பட ஏராளமான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
கொள்ளையர்கள் வீடு புகுந்து பொருட்களை திருடிவிட்டு காரின் கண்ணாடியை உடைத்து அதில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.
இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டு்ள்ளது.
வீட்டில் 8 பீரோக்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், டி.வி., லேப்-டாப், கார் உள்பட திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரிலாக்ஸாக திருடிய கொள்ளையர்...
கொள்ளையர்கள் வீட்டில் உள்ள பிரிட்ஜில் இருந்த பிஸ்கெட்களை சாப்பிட்டு விட்டு, நிதானமாக பொருள்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
திருட்டு குறித்து துணை கமிஷனர் அன்பு கூறுகையில்,
யாரோ நன்கு தெரிந்தவர்கள்தான் வீட்டை நோட்டமிட்டு இந்த கொள்ளையை நடத்தியுள்ளனர். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
கொள்ளை பற்றிய தகவல் அறிந்த எம்.எல்.ஏ. அசன் அலி சென்னைக்கு விரைந்துள்ளார்.