கொழும்பு திரைப்பட விழாவுக்கு 'ரா' பாதுகாப்பு!
ரா அமைப்பு தவிர, இந்தியாவின் முக்கிய பாதுகாப்புப் படையணிகள் சிலவும் ஏற்கெனவே இலங்கையில் இந்த விழாவுக்காக முகாமிட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் கொழும்பில் நடக்கும் இந்த விழாவை இந்திய தொழில் கூட்டமைப்பு (ஃபிக்கி) நடத்துகிறது. இதற்காக இந்திய திரை நட்சத்திரங்கள் பலரையும் கொழும்பு கொண்டு வர மிகத் தீவிரமாக முயன்று வருகிறது இலங்கையும் இந்திய அதிகார வர்க்கமும்.
ஆனால், தமிழ் நட்சத்திரங்கள் அனைவரும் இந்த விழாவைப் புறக்கணித்ததுடன், மற்ற மொழிக் கலைஞர்களும் இதில் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ் அமைப்புகளும், உணர்வாளர்களும் இத் திரைப்பட விழாவுக்கு எதிரான பிரச்சாகங்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழினப் படுகொலையை கொண்டாடும் வகையில் இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் இந்தியக் கலைஞர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், விழாவை நடத்துவதில் குறியாக உள்ளது இலங்கை. இதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குகிறது மத்திய அரசு.
விழா நடக்கும் இடத்துக்கான பாதுகாப்பு முதல் சகல உதவிகளையும் இந்தியாதான் அளிக்கிறது என்று இலங்கை தமிழ் இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் உயர் உளவுத் துறையான ரா மற்றும் சில பாதுகாப்புப் படைப் பிரிவுகள் கொழும்பில் முகாமிட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்புகளை மீறி இலங்கைக்கு வரும் திரைப்படக் கலைஞர்களுக்கு பூரண பாதுகாப்பு அளிக்கப்படும் என இலங்கை காவல் துறையும் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில தமிழக திரைப்பட கலைஞர்கள் மட்டுமே எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும், இதனை பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.