காங். எம்எல்ஏ வீட்டில் கொள்ளை-ஒருவன் கைது: கார் மீட்பு
சென்னை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் அலியின் சென்னை வீட்டில் ஏராளமான நகைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட கார் மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலும் அடையாளம் காணப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் எம்எல்ஏ அசன் அலியின் சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் அவரது மகள் அஹானா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அஹானா வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் மலேசியா சென்ற நிலையில் கடந்த 24ம் தேதி இரவு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ஏராளமான நகைகள், டி.வி, லேப்-டாப், டி.வி.டி. பிளேயர், வெளியே நின்றிருந்த கார் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
இந் நிலையில் திருடு போன கார் மீட்கப்பட்டுள்ளது. இதை மணலியைச் சேர்ந்த வீரா (23) என்பவன் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
அவனோடு சேர்ந்து வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட
நாகர்கோவில் சமாதானபுரத்தை சேர்ந்த ஏசுவடியான் (24) மற்றும் இன்னொருவனை போலீசார் தேடி வருகின்றனர்.
வீரா மீது மணலி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஏசுவடியான் மீது கொலை, கொள்ளை உள்பட மொத்தம் 45 வழக்குகள் உள்ளன.