புலி ஆதரவு பேச்சு-பினாங்கு மாநில துணை முதல்வர் மீது நடவடிக்கை கோரும் இந்தியா!
டெல்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மலேசிய அரசுக்கு இந்தக் கோரிக்கையை இந்தியா விடுத்துள்ளது.
சீமானின் நாம் தமிழர் அரசியல் மாநாடு மதுரையில் மே 18ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ் ஆர்வலர்களும், ஈழ மக்களுக்கான பல்வேறு அமைப்புகளும் பங்கு கொண்டன.
மேலும் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
"மலேசியாவில் எங்கள் ஆட்சி அமைந்தால் விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் அளிப்போம்" என்று அவர் பேசியதாக உளவுத்துறை குறிப்பு தெரிவிக்கிறது.
இது குறித்து இந்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு விரிவான அறிக்கையை அளித்தது. இதையடுத்து இந்த குறிப்புகள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இந்த குறிப்புகளை மலேசிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், அத்துடன் ஒரு கோரிக்கை கடிதமும் அனுப்பியுள்ளது.
அதில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி பேசியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.