தென் பசிபிக் கடலில் பயங்கர நில நடுக்கம்!
போர்ட்விலா: ஆஸ்திரேலியாவுக்கு வட கிழக்கே வனாது தீவு அருகே பசிபிக் கடலில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
வனாது தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.6 புள்ளிகளாகப் பதிவானது.
ஆஸ்திரேலியாவுக்கு வட கிழக்கே 2,070 கி.மீ. தூரத்தில் நியூசிலாந்துக்கு வட மேற்குப் பகுதியில் கடலுக்கடியில் 36 கி.மீ. ஆழத்தி்ல் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து நியூசிலாந்து, சாலமன் தீவுகள், வனாது, நியூ கேலிடோனியா ஆகிய தென் பசிபிக் பகுதி தீவுகளை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் சுனாமி அலைகள் ஏதும் உருவாகாததால் அது வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 5 முறை சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் ஏதும் இல்லை.