ரயிலை கவிழ்த்த நக்ஸல்கள்: கவிழ்ந்த ரயில் மீது மோதிய சரக்கு ரயில்-65 பேர் பலி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மித்னாபூர் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தை நக்ஸலைட்டுகள் அகற்றி சதி வேலையில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த வழியே வந்த ஹெளரா-குர்லா எக்ஸ்பிரஸ் கவிழ்ந்து. இதில் 65 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. மேற்கு மித்னாபூர் மாவட்டம் ஜர்கிராம் என்ற இடத்தில் கெம்சோலி- சர்தியா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தின் ஒரு பகுதியையே நக்ஸலைட்டுகள் அகற்றிவிட்டனர். இதை குண்டு வைத்து தகர்த்தார்களா அல்லது தண்டவாளத்தை வெட்டி அகற்றினார்களா என்று தெரியவில்லை.
ஹெளராவில் இருந்து மும்பைக்கு வந்த லோக்மான்ய திலக் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரயில், இந்த இடத்துக்கு வந்தபோது பயங்கர வேகத்தில் தூக்கி வீசப்பட்டது. இதில் 13 பெட்டிகள் கவிழ்ந்தன. இதில் 65 பயணிகள் பலியாயினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கவிழ்ந்த ரயில் மீது மோதிய சரக்கு ரயில்!:
இந் நிலையில் கவிழ்ந்த இந்த ரயிலின் 5 பெட்டிகள் பக்கத்தில் இருந்த இன்னொரு தண்டவாளத்தில் உருண்டு கிடந்தன. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் இந்தப் பெட்டிகள் மீது மோதியதில் பலர் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.
ராணுவ ஹெலிகாப்டர்கள்:
சம்பவ இடத்க்கு ராணுவத்தின் இரு எம்-15 ரக ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்து காயமடைந்தவர்களை உடனடியாக மித்னாபூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றன.
மேலும் ராணுவ மருத்துவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மருந்துகள், மருத்துவர்களுடன் ஒரு சிறப்பு ரயிலும் காரக்பூரில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் மீட்புப் பணிகளி்ல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணை நடத்த மம்தா கோரிக்கை:
சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
சட்டம்-ஒழுங்கு, நக்ஸல் பிரச்சனை ஆகியவை மாநில அரசின் பிரச்சனைகள் என்றும், பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மேற்கு வங்க இடதுசாரி அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பலியான, காயமடைந்த பயணிகள் குறித்த தகவல் அறிய:
Railways Helpline Numbers:
Toll free number - 10722
Kharagpur - (0322) 255751 and 255735
Howrah - (033) 26382217
Tatanagar - (0657)2290324, 2290074, 2290382
Rourkela - (0661) 2511155,
Chakradharpur - (06587) 238072
Jharsuguda - (06445) 270977
இந்த விபத்தையடுத்து ஹெளரா-டாடா நகர் இடையிலான ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.