அதிமுகவிலிருந்து முத்துசாமி-கரூர் சின்னச்சாமி நீக்கம்: ஜெ. அதிரடி
அதிமுக மாநில அமைப்புச் செயலாளராக உள்ள முத்துசாமி கட்சியின் செயல்பாட்டை மீறியதால் அவர் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முத்துசாமிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது ஆதரவாளர்களான வி.கே.சின்னச்சாமி, ஈரோடு மாணிக்கம் ஆகியோரையும் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
அதே போல முன்னாள் அமைச்சரும், முன்னாள் அதிமுக எம்பியும், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைத் தலைவருமான கரூர் சின்னசாமியையும் அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
இவரும் திமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியானதையடுத்து ஜெயலலிதா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தன்னை வளர்த்து விட்ட அதிமுகவுக்கு துரோகம் புரிந்து சுய நலத்திற்காக திமுகவில் போய்ச்சேர திட்டமிட்டு தனக்கு மனக்குறை இருப்பதாக சொல்லிக்கொண்டு, நேரில் வந்து சந்தித்துப் பேசுமாறு கழகப் பொதுச் செயலாளர் பலமுறை அழைத்தும் வராமல், கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்து, அதைப் படித்துப் பார்த்த பிறகு மீண்டும் கழகப் பொதுச்செயலாளர் நேரில் வந்து பேசுமாறு அழைப்பு விடுத்ததும், வராமல் உண்மைக்கு புறம்பான பல தகவல்களை தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளில் பரப்பி கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,
கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சு.முத்துசாமி (கழக அமைப்புச் செயலாளர், ஈரோடு மாநகர் மற்றும் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர்) மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டு கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தலைமை கழகத்தாலும் கழக பொதுச்செயலாளராலும் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து கழக தலைமைக்கு எதிராக கழக உடன்பிறப்புகளை தூண்டிவிடும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு,
கழக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கழகப் பொதுச் செயலாளர் பற்றிய அவதூறு பிரசாரம் செய்து வரும் கரூர் சின்னசாமி (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர்), வி.கே.சின்னசாமி (ஈரோடு புறநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர், முன்னாள் எம்.பி.இஎம்.எல்.ஏ.), ஈரோடு சி.மாணிக்கம் (ஈரோடு மாநகர் மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ.) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்ப்டை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்ப்டுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதையடுத்து முத்துசாமியும் சின்னச்சாமியும் திமுகவில் இணையவுள்ளனர்.
ஜானகி அணியில் இருந்த அதிமுகவினரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருப்பதாக முத்துசாமி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய முத்துசாமி, நான் அனுப்பிய கடிதம் கிடைத்தவுடன் என்னை அழைப்பார்கள் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் எனக்கு அழைப்பு வரவில்லை. மாறாக அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சிக்காரர்கள் என்னை திட்டியிருக்கிறார்கள். ஜெயலலிதா தலைமையில் நடந்த கூட்டத்தில் என்னை திட்ட அனுமதித்தது நியாயமா?. முத்துசாமி கடிதம் எழுதி இருக்கிறார். சற்று பொறுத்திருங்கள் என்று ஜெயலலிதா அவர்களிடம் கூறியிருக்கலாமே?.
நான் திமுகவுக்கு செல்வது குறித்து நான் மட்டும் முடிவெடுக்க முடியாது. ஆதரவாளர்களின் விருப்பங்களையும் தெரிந்து கொண்டுதான் முடிவெடுக்கப்படும் என்றார்.