வன்முறை வேண்டாம்-நக்ஸலைட்டுகளுக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை: நக்ஸல்களி்ன் லட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம். ஆனால், அவற்றை நிறைவேற்ற இப்போது அவர்கள் கையாண்டு வரும் வன்முறைகள் மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானவை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
கோட்டையில் இன்று நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அதன் விவரம்:
கேள்வி: துணை முதல்வர் பதவியினையேற்று இன்றுடன் ஓராண்டு முடிவடைகிறது. அவரது ஓராண்டு கால செயல்பாடு உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?
பதில்: (சிரித்துக் கொண்டே) திருப்தி அளிக்காவிட்டாலும், திருப்தி அளிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்... ஆனால், இவரது பணி மிகவும் திருப்தி அளிக்கிறது.
கேள்வி: அவர் பதவியேற்றபோது எதிர்க் கட்சிகளுக்கும், அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவேன் என்று சொல்லியிருந்தார். அப்படி செயல்பட அவரால் முடிந்திருக்கிறதா?
பதில்: அரசுக்கு பலமாகவும், எதிர்க்கட்சிகளோடு இணைப்புக்கு பாலமாகவும் அவர் செயல்படுகிறார்.
கேள்வி: நக்சலைட்டுகள் சமீபகாலமாக பொது மக்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்களே...
பதில்: அவர்களது லட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம். அவர்களது கொள்கைகள் சிலாக்கியமானவைகளாக இருக்கலாம். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் இப்போது அவர்கள் கையாளுகின்ற முறைகள் மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானவை.
ரயிலைத் தகர்த்ததில் மாண்டு போனவர்களின் படங்கள் எல்லாம் வெளி வந்திருக்கின்றன. அதில் ஒரு காட்சி- ஒரு குழந்தையின் உடலை தூக்கிச் செல்கிறார்கள். காட்சி. இந்தக் குழந்தைக்கும் மாவோ இயக்கத்திற்கும் எந்தவிதமான மாறுபாடான கருத்தும் கிடையாது. சமுதாயத்திலே உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மற்றவர்கள் இறப்பைப் பற்றிக் கவலைப்படாமல்- தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று கருதுகின்ற நிலை வளருவது நல்லதல்ல.
அந்த இயக்கங்களின் அடிப்படையான பொதுவுடைமைக் கொள்கைகளில் எனக்கு மாறுபாடு இல்லை. ஆனால், அவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இந்த முறை சரிதானா என்பதை அந்த இயக்கங்களின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக நான் சொல்லி வருகின்ற ஒரு கருத்து இது. அந்தக் கருத்தை இந்தியாவிலே எங்கேயோ ஒரு மூலையில் தமிழ் நாட்டிலேயிருந்து நான் ஒலிக்கின்றேன். அந்தக் கருத்துக்கு மாவோ தலைவர்கள் மதிப்பளித்து மனித நேயத்தைக் காப்பாற்றுவதற்குப் பக்க பலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி: பாமக உங்களோடு கூட்டணிக்கு வருமா, வராதா என்பது ஒரு விவாதமாகவே இருக்கிறதே..
பதில்: நாளைக்கு தான் எங்கள் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் என்ன முடிவு செய்வார்கள் என்று தெரியவில்லையே!.
இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.
சென்னையில் ரூ.633 கோடியில் கால்வாய் திட்ட பணி:
முன்னதாக ரூ. 633 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் மேற்கொள்ளப்படவுள்ள 17 மழை நீர் வடிகால்-கால்வாய் திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்தப் பணிகள் அனைத்தையும் 3 ஆண்டு காலத்தில் நிறைவேற்றி முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.