வருத்தம் தெரிவித்தது கனடா-'சாப்டர் குளோஸ்' என்கிறது இந்தியா
பெங்களூர்: இந்திய ராணுவம், உளவுத்துறையினர், ஓய்வு பெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு விசா வழங்க மறுத்ததோடு அவர்கள் பணியாற்றிய துறைகளையும் மிகக் கடுமையாக விமர்சித்த சம்பவத்திற்காக கனடா அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்திய எல்லை பாதுகாப்பு படையை மக்களுக்கு எதிரான படை என்றும், இந்திய உளவுத்துறையான ஐ.பியை பல்வேறு தேசங்களில் ஆட்சியைக் கவிழ்க்கும் அமைப்பு என்றும் கனடா நாட்டு தூதரகம் விமர்சித்தது.
அந் நாட்டுக்குச் செல்ல விசா கோரி இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சென்றபோது, அவர்களிடம் தூதரக அதிகாரிகள் இவ்வாறு கருத்துத் தெரிவித்தனர்.
மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு அதிகாரிக்கே விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.
இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தப் பிரச்சனையில் கனடா மன்னிப்பு கோராவிட்டால், இந்தியா வழியாக ஆப்கானிஸ்தான் சென்று வரும் கனடா நாட்டு ராணுவத்தினர், உளவுப் பிரிவினர், அதிகாரிகளை திருப்பி அனுப்புவோம் என்று மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்தது.
மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதர் சோபி அகரை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் வரவழைத்து, கண்டனம் தெரிவித்தது.
இந் நிலையில் கனடா நாட்டின் குடியுரிமைத் துறை பொறுப்பு அமைச்சர் ஜாக்ஷன் கென்னி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள், கனடா நாட்டின் சட்டம் மற்றும் ஜனநாயக முறைகளின் கீழ் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
எங்கள் நாட்டு அதிகாரிகள் கடுமையாக விமர்சனம் செய்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது கனடா அரசையும், கொள்கையையும் பாதிக்காது.
இந்த சம்பவத்திற்காக கனடா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. இந்தியா மீது கனடா மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, இந்திய அதிகாரிகளுக்கு கனடா நாட்டு தூதரக அதிகாரிகள் விசா வழங்க மறுத்து கடிதத்தில் அதிகாரிகளைப் பற்றி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.
இதன் மூலம் கனடா அதிகாரிகள் தாங்கள் தவறு செய்துள்ளதை உணர்ந்துள்ளனர். எனவே, இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வருகிறது. இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். கனடா நாட்டின் சட்ட, திட்டத்துக்குட்பட்டு நாம் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
சயீத்தை பாக். நீதிமன்றம் விடுவித்தது ஏமாற்றம்:
மும்பையில் 166 பேர் பலியாகக் காரணமான தீவிரவாத தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பாளர் ஹபீஸ் சயீத்துக்கு தண்டனை கிடைக்க போதுமான ஆதாரங்களை இந்தியா வழங்கியபோதும் அவரை வீட்டுக் காவலில் இருந்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் விடுவித்தது ஏமாற்றம் அளிக்கிறது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஜமாத்-உல்-தாவா தலைவரும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பாளருமான ஹபீஸ் சயீத்துக்கு உள்ள தொடர்பு குறித்த முக்கிய, போதுமான ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கியது.
ஆனாலும் சயீத்தை வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பதை எதிர்த்து பஞ்சாப் அரசு பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து, சயீத்தை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்துள்ளது. இது ஏமாற்றம் அளிக்கிறது.
இந்த வழக்கில் பாகிஸ்தான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை வைத்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்நாட்டு அரசு நீதிமன்றத்தில் எந்த மாதிரியான ஆதாரங்களை சமர்ப்பித்தன என்று தெரியவில்லை. ஆனாலும் நாம் அளித்த ஆதாரங்கள் உண்மையானவை. சயீத்தை தண்டிக்க போதுமானவை என்று நமது சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் தொடுக்க வேண்டுமென சயீத் அந்நாட்டில் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் தலைமையில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உல்-தாவா ஆகியவை தீவிரவாத இயக்கங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையே அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடத்த வரும் ஜூலை மாதம் இஸ்லாமாபாத்திற்கு செல்ல உள்ளேன். அப்போது, சயீத்தை தண்டிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றார்.