எம்.பி.பி.எஸ்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்- ஜூன் 11ல் ரேங்க் பட்டியல்
சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மறறும் பொறியியல் பிடிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க நாளையே (மே 31ம் தேதி) கடைசி நாளாகும்.
தமிழகத்தின் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க மே 17ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 20,000 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று தினங்களில், மொத்தம் 9,350 மாணவ-மாணவிகள் இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்பித்துள்ளனர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை (மே 31) மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமோ சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும்.
மாணவர்கள் அனுப்பி பூ்ர்த்தி செய்த விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு கிடைத்து விட்டதா என்பதைத் www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பிளஸ் 2 பதிவு எண், பிளஸ் 2 தேர்வு எழுதிய ஆண்டை இந்த இணையத்தளத்தில் சமர்பித்து, விண்ணப்பம் கிடைத்து விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். மேலும் விண்ணப்பம் கிடைத்ததற்கான பதிவு எண்ணையும் இதில் அறியலாம்.
இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, வரும் ஜூன் 7ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும். இதையடுத்து ஜூன் 11ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.
எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கவுன்சலிங் ஜூன் 21ம் தேதி தொடங்கும்.