சென்னையில் மேலும் 12,000 ஆட்டோக்களுக்கு பெர்மிட்!
சென்னை: சென்னை நகரில் மேலும் 12,000 ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்படவுள்ளது.
நாட்டில் சென்னையை விட சிறிய நகரங்களில் எல்லாம் கூட ஆட்டோக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் 80,000 வரை ஆட்டோக்கள் உள்ளன.
ஆனால், சென்னையில் 52,000 ஆட்டோக்களே ஓடுகின்றன. இவை போதுமானதாக இல்லை என்பதால், ஆட்டோ பெர்மிட் வழங்குவதற்கான தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி சென்னையில் மேலும் 12,000 ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் ராஜாராம் கூறுகையில், சென்னையில் புதிதாக ஆட்டோ பெர்மிட் கோரி 13,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 12,000 பேருக்கு பெர்மிட் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெர்மிட் பெற கட்டணம் ரூ. 325 மட்டும்.
பெர்மிட் பெற விரும்புபவர் சென்னையில் வசிப்பராக இருக்க வேண்டும். உரிய ஆய்வுக்குப் பின்னரே பெர்மிட் வழங்கப்படும். எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், மிக எளிமையாக, யாரும் பெர்மிட் வாங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
வாகனங்கள்-அதிக குழந்தைகளை ஏற்றினால் நடவடிக்கை:
இதற்கிடையே கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இந்த வாரத்தில் திறக்கப்படவுள்ளன.
பள்ளி வாகனங்களில் அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து ஆய்வு செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் விடுமுறையில் பராமரிக்கப்பட்டனவா என்பதையும், அதன் எப்.சி. குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
பள்ளி, கல்லூரி வாகனங்கள் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டதாக இருக்க வேண்டும். குழந்தைகள் படத்துடன் பள்ளி வாகனம், கல்லூரி வாகனம் என்று முன்புறமும், பின்புறமும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இதை பின்பற்றாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார் ராஜாராம்.