அதிமுகவிலிருந்து வந்த 2 பேருக்கு ராஜ்யசபா சீட் தந்த திமுக
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் திமுகவுக்கு 3 இடங்கள் கிடைக்கவுள்ளன. காங்கிரசுக்கு ஒரு எம்பியும், அதிமுகவுக்கு சுய பலத்தி்ல் ஒரு எம்பியும், இடதுசாரிகள், மதிமுக ஆதரவோடு இன்னொரு எம்பி பதவியும் கிடைக்கவுள்ளது.
இந் நிலையில் நேற்று நடந்த திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் 3 இடங்களுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதிக்கு இந்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவர் தவிர திமுக விவசாய அணிச் செயலாளரான
கே.பி.ராமலிங்கம், முன்னாள் அமைச்சரான தங்கவேலு ஆகியோரும் நிறுத்தப்படவுள்ளனர்.
அதிமுகவிலிருந்து வந்த 2 பேருக்கு வாய்ப்பு:
தங்கவேலு, சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர். 1989ம் ஆண்டு சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்று, கைத்தறி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும், ஆதி திராவிடநலக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
டாக்டர் கே.பி.ராமலிங்கம், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர். மாணவப் பருவத்தில் அதிமுக ஆதரவாளராக இருந்தவர்.கால்நடை மருத்துவம் படித்தவர்.
1980ம் ஆண்டில் அதிமுக சார்பில் ராசிபுரம் எம்எல்ஏவாக தேர்வானார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியில் இணைந்தார். 1990ம் ஆண்டில் திமுகவில் இணைந்தார்.
1996ம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு எம்பியானார். தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் நலவாரியத் தலைவராக இருந்து வருகிறார். திமுக மாநில விவசாய அணிச் செயலராகவும் உள்ளார்.
டி.எம். செல்வகணபதி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர். எம்.ஏ, எல்.எல்.பி. முடித்தவர். 1991ம் ஆண்டு அதிமுக சார்பில் திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். 1999ல் சேலம் மக்களவை தொகுதி எம்பியானார்.
பின்னர் அதிமுகவில் ஓரங்கட்டப்பட்ட நிலையில் 2008ல் திமுகவில் இணைந்தார். தற்போது திமுகவில் தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலராக உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தின் தேர்தல் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. தருமபுரி தொகுதியில் செல்வாக்கு மிகுந்த பாமகவை தோற்கடித்து திமுகவை வெற்றி பெறச் செய்ததில் இவர் பெரும் பங்கு வகித்தார்.
இன்று முதல் வேட்பு மனு:
இந் நிலையில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
ஜூன் 7ம் தேதி வரையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். ஜூன் 8ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும்.
மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜூன் 10. போட்டி இருந்தால் ஜூன் 17ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
6 பேரும் போட்டியின்றி தேர்வு?:
ஆனால், இந்தத் தேர்தலில் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவர் என்றே தெரிகிறது.
2 இடங்களில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதற்கு கட்சிகளான மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
திமுக 3 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் போட்டியிருந்தாலும் வென்றுவிட முடியும். இதனால் மற்ற கட்சிகள் போட்டியிடமாட்டார்கள் என்றே தெரிகிறது.
அதிமுக, காங்கிரஸ் ஆகியவை தங்கள் வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை.