இலங்கை பிரச்சனை: மத்திய அரசு நடவடிக்கைகளில் மனநிறைவு இல்லை-கருணாநிதி
சென்னை: இலங்கையில் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதிய மனநிறைவு அளிப்பதாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
இலங்கையில் போர் முடிந்து ஏறத்தாழ ஓராண்டுக்கு மேல் ஆகியும், இலங்கையில் தேர்தல்கள் நடைபெற்ற புதிய அரசு அமைந்த பின்னருங்கூட, போரினால் பாதிக்கப்பட்ட சுமார் இரண்டரை லட்சம் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்களது சொந்தப் பகுதிகளுக்குத் திரும்பியும்கூட, சொந்த வீடுகளில் சென்று வாழ முடியாத நிலை இன்னமும் நீடித்துக் கொண்டிருப்பதும், ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தடுக்கப்பட்டு இன்னமும் முகாம்களில் வாழக் கூடிய சோகமான நிலைமை தொடர்ந்து கொண்டிப்பதும் நமக்கெல்லாம் மிகுந்த வேதனையையும், கவலையையும் அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
இன்னமும் தற்காலிக முகாம்களில் உள்ள தமிழர்கள் உடனடியாக அங்கிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் தத்தமது சொந்த வீடுகளுக்குச் சென்று வாழ்வதற்கான வழிவகை ஏற்படுத்தப்பட வேண்டும். சொந்தப் பகுதிகளுக்குச் சென்றும் இன்னமும் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு உடனடியாக அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்கள் செய்துதரப்பட வேண்டும்.
சர்வதேச பரிமாணம் அடைந்துள்ள இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டிய தேவையைப் பற்றி இலங்கை அரசுக்கு பல்வேறு நிலைகளில் இந்திய அரசு நிர்ப்பந்தம் செலுத்தி வருகிறது. இலங்கைத் தமிழர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மத்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. எனினும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 500 கோடி ரூபாயை இலங்கைத் தமிழர்களுக்காக முறையாகப் பயன்படுத்திடத்தக்க திட்ட வரைவுகளை இலங்கை அரசு செய்திட இன்னமும் முன்வரவில்லை என்பது வேதனையிலும் வேதனையானச் செய்தியாகும்.
எனவே, இந்திய அரசு மனமுவந்து இலங்கைத் தமிழர்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள 500 கோடி ரூபாயை உடனடியாக இலங்கைத் தமிழர்களுக்காகப் பயன்படுத்திட; இலங்கை அரசை இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டுமென்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் 73,572 இலங்கைத் தமிழர்களை இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின்கீழ் மறுகுடியமர்த்தும் முயற்சியாக மத்திய அரசோடு கலந்து பேசி அவர்கள் அனைவரும் தமிழகத்திலே நிரந்தரமாகக் குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் தீர்மானித்து, மத்திய அரசை ஏற்கனவே கேட்டுக் கொண்டும் இதுவரையில் மத்திய அரசு அதுகுறித்து தீவிரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை வருத்தத்தோடு சுட்டிக் காட்டுவதோடு இனியாவது இந்தப் பிரச்சனையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாண்டு துயருறும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மலேசியாவில் தமிழ் அகதிகள்:
இலங்கையிலிருந்து வெளியேறி மலேசியாவிற்கு அகதிகளாகச் சென்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 இலங்கைத் தமிழர்கள் மலேசிய அரசினால் சிறைபிடிக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் சிறைபட்டுள்ள 75 இலங்கை தமிழர்களை காப்பாற்றிட கருணை உள்ளத்தோடு முன்வர வேண்டுமென்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது..
இக் கூட்டம் முடிந்த பின் நிருபர்களுக்கு முதல்வர் கருணாநிதி அளி்த்த பேட்டி:
கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சனை குறித்த தீர்மானத்தில் இனியாவது ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால் இதுவரை அவர்கள் செய்ததில் உங்களுக்கு திருப்தி இல்லை என்று சொல்லலாமா?
பதில்: திருப்தியே இல்லை என்று சொல்ல முடியாது. போதுமான அளவிற்கு மனநிறைவு இல்லை.
கேள்வி: இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: அனுப்பப்பட்ட பொருள்களை இன்னும் சரிவர அவர்களுக்கு வினியோகிக்கப்படவில்லை என்று புகார் இருக்கிறது. அது உண்மையாக இருந்தால், அதை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டுமென்பது எங்களுடைய வேண்டுகோள் என்றார்.