ஹெட்லியை விசாரிக்க யு.எஸ்சில் இந்திய அதிகாரிகள்!
ஹெட்லியை இந்திய அதிகாரிகள் விசாரிக்கவுள்ளது இதுவே முதல் முறையாகும். மும்பையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்த பல வகையில் உதவியாக இருந்தவன் ஹெட்லி. இது அமெரிக்க விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து ஹெட்லியை விசாரிக்க இந்தியா அனுமதி கோரியது. ஆனால் அமெரிக்கா இழுத்தடித்து வந்தது. இந்த நிலையில் ஹெட்லி, அமெரிக்க போதைப் பொருள் தடுப்புப் போலீஸாருக்காக உளவு பார்த்த உளவாளி என்ற விவரமும் தெரிய வந்து இந்திய அதிகாரிகளை குழப்பியது.
இந்த நிலையில்,ஹெட்லியை விசாரிக்க இந்தியத் தரப்பிலிருந்து அமெரிக்காவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா சென்றிருந்தபோது இதுகுறித்து அதிபர் ஒபாமாவிடம் நேரில் வலியுறுத்தினார்.
இதையடுத்து ஹெட்லியை விசாரிக்க இந்தியாவுக்கு அனுமதி கிடைத்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து விசாரணையாளர் குழு அமெரிக்கா விரைந்துள்ளது. இன்று சிகாகோவுக்கு வந்தடைந்தது இந்தியக் குழு.
தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் கொண்ட குழுவாக இவர்கள் வந்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் ஹெட்லி கைது செய்யப்பட்ட பின்னர் இப்போதுதான் முதல் முறையாக இந்திய அதிகாரிகள் ஹெட்லியை விசாரிக்கவுள்ளனர்.
இந்தியக் குழு ஹெட்லியை விசாரிக்கும்போது ஹெட்லியின் வக்கீல் மற்றும் ஒரு எப்.பி.ஐ. அதிகாரி ஆகியோர் உடன் இருப்பார்கள்.
சிகாகோ மெட்ரோபாலிடன் சீர்திருத்த மையத்தில் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளான் ஹெட்லி. அங்கு வைத்தே அவனிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
ஹெட்லியை விசாரித்த பின்னர் இந்திய கோர்ட்டில் தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்கு தொடரும்.