'இலக்கிய உலகின் ஜாம்பவான் கருணாநிதி'-அன்சாரி
சென்னை: முதல்வர் கருணாநிதி இலக்கிய உலகின் ஜாம்பவானாக உயர்ந்து நிற்கிறார் என துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி பாராட்டினார்.
முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள 536 நூல்களில், 12 நூல்களைத் தேர்வு செய்த கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளது.
தொல்காப்பிய பூங்கா, காலப்பேழையும் கவிதை சாவியும், கவிதை மழை 3 தொகுதிகள், தென்பாண்டி சிங்கம், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், முத்துக்குளியல், பராசக்தி மற்றும் மனோகரா, பூம்புகார் மற்றும் ஓரங்க நாடகங்கள், கலைஞரின் சிறுகதைகள் ஆகிய 12 புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இதன் வெளியீட்டு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை தாங்கினார்.
துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி புத்தகங்களை வெளியிட்டார். அவரிடம் இருந்து மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி புத்தகங்களை பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஹமீத் அன்சாரி பேசுகையில்,
தமிழ் மொழிக்கும், உலக இலக்கியத்திற்கும் முக்கிய பங்களிப்பை இந்த விழா அளிக்கிறது. இந்திய அரசியலில் இலக்கிய ஆற்றல், அரசியல் பார்வை மற்றும் சமூக தொண்டு ஆகியவை வெற்றிகரமாக ஒருங்கிணைந்த ஒரு சில தலைவர்களுள் முதல்வர் கருணாநிதியும் ஒருவர். தமிழ் மக்களுக்கும், அவர்களுடைய பண்பாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் தனிப்பட்ட முறையில் அவருக்குள் அக்கறையை அவருடைய இலக்கிய மற்றும் அரசியல் வாழ்க்கை எடுத்து காட்டுகிறது.
கருணாநிதியின் எழுத்துக்கள், பெரியார், அண்ணாவின் அரசியல் பாரம்பரியத்தையும், பாரதியாரின் இலக்கிய பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன. முறையான கல்லூரி கல்வியை அவர் முடிக்காவிட்டாலும், பழைய தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்வதில் அவருக்கு எந்த தடையும் இருந்ததில்லை. இதழியல், சினிமா, நாடகம் மற்றும் பேச்சாற்றல் ஆகியவற்றை அவர் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்காக வெற்றிகரமாக பயன்படுத்தியவர் இவர்.
நம்முடைய பழைய கதைகளை நமக்குள்ளாகவே கூறிக்கொள்வதில் எந்த வெற்றியும் கிடையாது. நம்முடைய கவிதைகளுக்கு வெளிநாடுகளில் மதிப்பு கிடைக்கும் போதுதான் அவை உண்மையாகவே புகழ் வாய்ந்தவையாக அமையும் என்று மகாகவி பாரதியார் கூறியுள்ளார்.
இது தமிழ் மற்றும் இதர இந்திய மொழிகளில் உள்ள கவிதைகளுக்கும், கதைகளுக்கும் பொருந்தும். நம்முடைய இலக்கியங்களையும், கவிதைகளையும், படைப்புகளையும் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யாவிட்டால், நம்முடைய இலக்கிய செழுமையும், சிறப்பும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தெரியாமல் போய்விடும்.
நாடக இலக்கியத்திற்கு தன்னுடைய பங்களிப்பின் மூலம் இலக்கிய ஜாம்பவானாக முதல்வர் கருணாநிதி உயர்ந்தவர். அவருடைய அந்த நாடக இலக்கியம் முதலில் சினிமா தயாரிப்புகளுக்காக எழுதப்பட்டவையாகும். அவை பெரும் புகழ் பெற்று முத்திரை பதித்த படங்களாக வெளிவந்து, சமூக தீமைகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்தாக எதிரொலித்தன.
கருணாநிதியின் உரைநடையிலும் கூட கவித்துவம் காணப்படுகிறது. அவருடைய கவிதைகளில் தமிழ் மொழியில் அவருக்குள்ள ஆளுமை வெளிப்படுகிறது. கருணாநிதியின் மொழி மற்றும் இலக்கிய கொள்கைகள் அவருடைய தொல்காப்பிய பூங்காவில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் உள்ள ஒரு பாடல் குறித்து உரை எழுதிய கருணாநிதி ஏழ்மையை பற்றி கூறியுள்ள காட்சி என்னுள்ளத்தை வெகுவாக தொட்டது.
நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் பண்பாட்டுக்கும், தமிழ் மொழிக்கும், இன்னும் பல ஆண்டுகள் கருணாநிதி தொண்டாற்ற வேண்டும் என்றார் அன்சாரி.
மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, வயலார் ரவி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் க.திருவாசகம், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சி.சுவாமிநாதன், பன்னாட்டு தமிழ் இணையக்கழக தலைவர் வா.செ.குழந்தைசாமி, சபாநாயகர் ஆவுடையப்பன், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.