கோரிக்கையை ஏற்றது மலேசியா.. உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர் தமிழர்கள்!
இலங்கையிலிருந்து தப்பி கப்பல் மூலம் வேறு நாட்டுக்கு அடைக்கலம் தேடிப் புறப்பட்டனர் இலங்கைத் தமிழர்கள் 75 பேர். மலேசியா அருகே சென்றுகொண்டிருந்தபோது, இந்தக் கப்பல் பழுதடைந்துவிட்டது. அப்போது மலேசிய கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் இவர்கள் 75 பேரும்.
தங்களை கைதிகளாக வைத்திராமல், அகதிகளாக ஏற்கும் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மலேசியா அரசு, இவர்கள் அனைவரையும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்போவதாக கூறப்பட்டதால், கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வந்தனர்.
உண்ணாவிரதம் இருந்த ஈழத் தமிழர்களை காப்பாற்ற பல்வேறு உலக தமிழ் அமைப்புகளுக்கும், கோரிக்கை விடுக்கப்பட்டது. பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, ஐ.நா.வின் அகதிகளுக்கான அதிகாரிகளை சந்தித்து, ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார். உள்துறை அமைச்சகத்திடமும் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
அதேபோல மாற்று செயல் அணி அமைப்பைச் சேர்ந்த கலைவாணரும், மலேசிய ஆணையர் டத்தோ அப்துல் ரகுமானை சந்தித்து, ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தினார்.
இதன்பிறகு மலேசிய பிரதமரின் அந்தரங்க செயலாளரைச் சந்தித்து, உண்ணாவிரதமிருக்கும் தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக முன் வைத்தார்.
அதன்பிறகு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பிரதமரின் அந்தரங்கச் செயலாளரின் உத்தரவின் பேரில் உண்ணாவிரதத்தை கைவிடச் செய்தார்.
முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் புலிகளின் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தவறான தகவலை அரசுக்கு சிலர் தந்துள்ளனர். அதனால்தான் ஈழத் தமிழர்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் இருந்ததாம். இப்போது உண்மை நிலையை மலேசிய அரசு உணர்ந்துள்ளதால் ஈழத்தமிழர்களை நாடு கடத்தும் முயற்சி கைவிடப்பட்டது.
அடுத்து மலேசியாவில் அவர்கள் இருக்கும் வரை அகதிகளுக்கான அனைத்து உதவிகளையும் கொடுத்து தங்க வைக்கவும் மலேசியா ஒப்புக் கொண்டுள்ளது.
இதனிடையே நார்வே, கனடா நாட்டின் தூதர்களிடம் தொடர்பு கொண்டு 75 பேரையும் அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களும் வரும் வியாழன் அன்று இதுகுறித்து முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.