யு.எஸ். ஆளில்லா விமானங்கள் ஏவுகணை தாக்குதல்: அல்-கொய்தா 'நம்பர் 3' தலைவர் பலி
அல்-கொய்தாவில் ஒசாமா பின் லேடன், அய்மான் அல்-ஜவாஹிரி ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் யாசித் (54). ஒரு பிரிவின் கமாண்டராகவும் இருந்தார்.
இவருக்கு ஷேக் சயீத் அல் மஸ்ரி என்ற பெயரும் உண்டு. இவர் ஒசாமா பின் லேடனின் உறவினராவார்.
பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் மறைந்திருந்த இவரது நடமாட்டத்தை அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் கண்காணித்து வந்தன.
இந் நிலையில் இது யாசித் தான் என்பதை உறுதி செய்த அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ, அமெரிக்கத் தலைமையகத்தில் இருந்தே ஆளில்லா உளவு விமானங்கள் மூலமே ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இதில் யாசித் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாகக் கொல்லப்பட்டனர். யாசித் பலியானதை அல்-கொய்தாவும் உறுத் செய்துள்ளது.
இதுதொடர்பாக அல்-கொய்தாவின் இணையத் தளங்களில் வெளியாகியுள்ள செய்தியி்ல், அமெரிக்க தாக்குதலில் யாசித், அவரது மனைவி, 3 மகள்கள், பேத்தி மற்றும் அவரது உறவினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.
இது குறித்து சிஐஏ அதிகாரிகள் கூறுகையில், அல்-கொய்தாவின் நிதி விவகாரங்களை கவனிப்பது முதல் தாக்குதல் திட்டங்கள் வகுப்பது வரை அந்த இயக்கத்தின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் யாசித்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் விமானங்கள் மூலம் நடந்த தாக்குதலுக்காக முகம்மத் அட்டா அல் ஷேரி மற்றும் வாலி அல் ஷேரி ஆகியோருக்கு துபாய் வழியாக பணத்தை அனுப்பியவர் யாசித் தான். இவர்கள் உள்ளிட்ட கும்பல் தான் விமானங்களைக் கடத்தி உலக வர்த்தக மைய கட்டடங்களைத் தகர்த்தனர்.
எகிப்தைச் சேர்ந்தவரான யாசித், அந் நாடடு அதிபர் அன்வர் சதாத்தை படுகொலை செய்த குற்றத்துக்காக 1981ல் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார். 2001ம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
கடந்த 2 வாரங்களாக பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் யாசித் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர் என்றனர்.
மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் கடந்த ஆண்டு விடியோவில் தோன்றி, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விட்டவர் யாசித் என்பது நினைவுகூறத்தக்கது.
தலிபான்களிடமிருந்து மாகாணத்தை மீட்ட நேட்டோ:
இந் நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடமிருந்து ஒரு மாகாணத்தை அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் மீட்டுள்ளன.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள நுரிஸ்தான் மாகாணத்திலுள்ள பார்கி மடால் பகுதி நீண்ட காலமாக தலிபான்ள் வசம் இருந்து வந்தது.
இந் நிலையில் கடந்த சில நாட்களாக ஆப்கனிஸ்தான் மற்றும் நேட்டோ படைகள் தொடர் தாக்குதல் நடத்தி பார்கி மடால் பகுதியை மீட்டுள்ளன.
வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் தெற்கு காந்தஹார் மாகாணப் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்து விடவும் நேடோ படைகள் திட்டமிட்டுள்ளன.
இதற்காக அங்கு 1.50 லட்சம் நேட்டோ-ஆப்கன் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.