மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் என்றாலே வீச்சரிவாள்தானா?-ஹைகோர்ட் நீதிபதி பரபரப்பு பேச்சு
திண்டுக்கல்: மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களை நினைத்தாலே, வீச்சரிவாள் கலாச்சாரம்தான் நினைவுக்கு வருகிறது என்று சென்னை உயர்நீதி்மன்ற நீதிபதி சுதாகர் பரபரப்பாக பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்பு விழா நடந்தது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபே தர்ம ராவ், கல்வெட்டை திறந்து வைத்தார்.
நீதிபதி சுதாகர் நிகழ்ச்சியில் பேசுகையில்,
ஒட்டன்சத்திரத்தில் 1,610 கிரிமினல் வழக்குகள், 116 செக் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தும், இங்கு கோர்ட் திறப்பதில் ஏனோ தாமதம் ஏற்பட்டது. வக்கீல்கள் முழு முயற்சி செய்யவில்லை.
கோர்ட் புறக்கணிப்பை காரணம் காட்டி, கோர்ட் எதற்கு என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மக்கள் நலனுக்காக, வக்கீல்கள் மற்றும் போலீசார் இணைந்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்கள் என்றாலே, வீச்சரிவாள், வேல்கம்பு கலாசாரம் தான் நினைவுக்கு வருகிறது.
இதை மாற்ற வேண்டும். சட்டரீதியாக உங்கள் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில், அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பை உயர்நீதிமன்றம் தரும் என்றார் சுதாகர்.