சென்னை ஏ.டி.எம். சென்டரில் கொள்ளை முயற்சி-காவலாளி படுகொலை
இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
கேளம்பாக்கம் அருகேயுள்ள நாவலூரைச் சேர்ந்த சத்யபான் சாகு (19), ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த இவர் மைலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 6 மாதமாக கழிப்பட்டூர், பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவுப் பணியில் இவர் ஈடுபட்டிருந்தார். இன்று அதிகாலை ஏ.டி.எம். மையத்துக்கு இரும்பு கம்பி, கடப்பாறை மற்றும் கத்தியை பேப்பர்களில் சுருட்டி மறைத்தபடி வந்த கும்பல், சத்யபானின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியது. பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தது.
இதையடுத்து கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை எடு்க்க முயன்றனர். ஆனால் எவ்வளவோ முயன்றும் அதை உடைக்க முடியாததால் அந்தக் கும்பல் தப்பிவிட்டது.
இன்று காலை ஏ.டி.எம். சென்டருக்கு பணம் எடுக்க வந்தவர்கள், காவலாளி இறந்து கிடந்தது கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். ஏடிஎம் மையத்தி்ல் உள்ள கேமராவில் கொலையாளிகள் பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது. அந்த வீடியோவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சைதாப்பேட்டையில் ரெளடி கொலை:
இதற்கிடையே சைதாப்பேட்டையில் ரெளடித்தனத்தில் ஈடுபட்டு வந்த ஜெய்கணேஷ் என்பவர் இன்று கொலையாகிக் கிடந்தார்.
கடந்த ஆண்டு பள்ளிக்கரணையில் ரியல் எஸ்டேட் அதிபர் சேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாவார்.
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரியல் எஸ்டேட் அதிபர் கொலைக்கு பழி வாங்கும் வகையில் இந்தக் கொலை நடந்ததா என்று போலீசார் விசாரித்து வருகினறனர்.