தனியார் பள்ளிகளில் கட்டணத்தைக் குறைக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்
சென்னை: தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைக் குறைக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை பள்ளி கல்வி இயக்ககம் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும், பள்ளி முதல் கல்லூரி வரை விஞ்ஞான பூர்வ இலவச கல்வி வழங்க வேண்டும்.
அரசு பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்த வேண்டும், தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிக்கும் கல்வி வியாபாரிகளை தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் ரெஜீஸ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று வருகின்றனர். இந்த சமயத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளியில் படித்த நெல்லை மாணவிதான் 10ஆம் வகுப்பில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
கல்லூரிகளில் கூட நுழைவுத் தேர்வை எடுத்து விட்டார்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் பி.கே.ஜி. சேருவதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கல்விக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளை அரசு ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.