கர்நாடகத்தில் ரூ.32,000 கோடி ஆர்செலார் மிட்டலின் ஸ்டீல் தொழிற்சாலை!
பெங்களூர்: உலகின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஆர்செலார் மிட்டல், ரூ.32,000 கோடி செலவில், ஆண்டுக்கு 6 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை கர்நாடகத்தில் அமைக்கிறது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை பெங்களூரில் நடந்து வரும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தானது.
கடந்த ஜனவரியிலேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது.
இந்த ஒப்பந்தம் குறித்து ஆர்செலார் மிட்டல் தலைவர் லட்சுமி மிட்டல் கூறுகையில், கர்நாடகத்தில் நல்ல வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிந்ததால் முதலில் இங்கே துவங்குகிறோம். மற்ற பகுதிகளை கவனித்து வருகி்றோம்..." என்றார்.
ஆர்செலார் மிட்டல் நிறுவனமும், தென் கொரியாவின் போஸ்கோவும் கிழக்கு மாநிலங்களில் 37 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட ஸ்டீல் தொழிற்சாலைகளை அமைக்க முயன்று வருகின்றன. ஆனால் விவசாயிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக இந்த தொழிற்சாலை முயற்சி தள்ளிப் போனது. எனவே தற்போது தென் மாநிலங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூரின் சுற்றுப் புறப் பகுதிகளில் மட்டும் 3.4 பில்லியன் இரும்புத் தாது காணப்படுகிறது. நாட்டிலேயே இரண்டாவது பெரிய இரும்புத் தாது இருப்பு இதுதான். 2010ல் 25 மில்லியன் இரும்பை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
"இந்தியாவுக்கு ஏராளமான அளவு இரும்பு தேவைப்படுகிறது. அந்த அளவு வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன. அதனால் இன்னும் நிறைய உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.." என்றார் மிட்டல்.
நேற்று நடந்த மாநாட்டில் 400 முதலீட்டாளர்கள் மாநில அரசுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ 3.5 ட்ரில்லியன். இந்த முதலீட்டாளர்களில் இன்போஸிஸ் மற்றும் விப்ரோவும் அடங்குவர்.