ஆகஸ்ட்டுக்குள் தமிழர்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படுவார்கள்! - இலங்கை
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது 3 லட்சம் தமிழர்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் வந்தனர். இவர்களை மீண்டும் அவரவர் வசிப்பிடங்களில் குடியமர்த்த புதிய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெவ்வேறு மூன்று முகாம்களில் இன்னும் தங்கியுள்ளனர். அவர்களை அவர்களது பழைய வசிப்பிடங்களில் கடந்த ஏப்ரல் மாதத்துக்குள் குடியமர்த்துவதற்கு கெடு விதிக்கப்பட்டது.
ஆனால் தமிழர் பகுதிகளில் இன்னும் சில இடங்களில் கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியிருப்பதால் முகாம்களில் உள்ளவர்களை குடியமர்த்துவது மேலும் தாமதமாகும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முகாம்களில் உள்ளவர்கள் அனைவரும் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் என்று தமிழர் மறுவாழ்வுக்கான புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மில்ராய் பெர்னாண்டோ தெரிவித்தார்.
முகாம்களில் உள்ள தமிழர்கள் தங்கள் பழைய வசிப்பிடங்களுக்கு செல்ல ஆவலாய் உள்ளனர். இருப்பினும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் ஏராளமான ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன.
அவற்றை கண்டுபிடித்து அகற்றும் பணி இன்னும் முடியவடையவில்லை. மேலும் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை கண்டுபிடித்து கைப்பற்ற வேண்டும் என்றார் பெர்னாண்டோ.