சங்கரன்கோவில் அருகே கோஷ்டி மோதல் -ஒருவர் கொலை-பதற்றம்
சங்கரன்கோவில் சங்கரன்கோவில் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் விவசாயி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக பஞ்சாயத்துத் தலைவர் உள்பட 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே உள்ளது மைப்பாறை கிராமம். இங்கு கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது தற்போதைய பஞ்சாயத்துத் தலைவர் ராமலிங்கசாமி என்ற துரைராஜ் தலைமையில் ஒரு கோஷ்டியும், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ரங்கராஜ் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டனர்.
இந்த கோஷ்டிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் பஞ்சாயத்து தலைவர் ராமலிங்கம் ஆதரவாளரான அழகர்சாமி என்பவரது மனைவிக்கு மைப்பாறை பள்ளியில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரங்கராஜ் ஆதரவாளர் ரவிசந்திரன் மேலிடத்தில் கூறி அவருக்கு பணி கிடைக்க விடாமல் தடுத்து விட்டார். இதை தொடர்ந்து அழகர்சாமி தரப்புக்கும், ரவிசந்திரன் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக திருவேங்கடம் போலீசில் வழக்கு உள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு 7 மணி அளவில் ரவிசந்திரன் தோட்டத்தில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது 15 பேர் கும்பல் இரும்பு கம்பிகளுடன் வழிமறித்து அவரை சராமரியாக தாக்கியது. இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த ரவிசந்திரன் அதே இடத்தில் இறந்தார். உடனே அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் டிஎஸ்பி சண்முகம், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசில், ஜெயசந்திரன், ஆதிலிங்கபோஸ் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள் ரவிசந்திரன் உடலை எடுக்க விடாமல் போலீசார தடுத்தனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்த பின் ரவிசந்திரன் உடலை கொடுத்தனர். அதை அவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அழகர்சாமி, கண்ணன், முத்தால்ராஜ், ஜெயராமன், புஷ்பராஜ், ராஜேந்திரன், பஞ் தலைவர் ராமலிங்கசாமி, திருநாராயணமூர்த்தி, பால்ராஜ், திருமூர்த்தி, போத்திராஜ், ஆதிராஜ், சீனிவாசன் உள்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுளளது.