வெளிநாட்டு வேலை தருவதாக கூறி 12 லட்சம் மோசடி - தந்தை, மகன்கள் மீது வழக்கு
வி.கே.புரம்: வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 12 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வி.கே.புரம் அம்பாள் ஆஸ்பத்திரி தெரு முதலியார் கம்பவுண்டில் வசித்து வருபவர் ராமகுரு, ஓய்வு பெற்ற பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர். இவருக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர்.
வி.கே.புரம் சத்திரம் நடுத் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் ராமகுருவை சந்தித்து அவரது மகன்களுக்கு லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறினார். ராமகுரு தனது மகன் சதிஷ்குமார், மருமகன் மணிகண்டன் ஆகியோருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருமாறு கண்ணனிடம் தெரிவித்தார்.
இதையடுத்து ராமகுரு தனது ஓய்வுதிய பணம் நாலரை லட்சம், மற்றும் ஓன்றரை லட்சம் கடன் வாங்கி மொத்தம் ரூ.6 லட்சம் கொடுத்தார். மேலும் மணிகண்டனின் உறவினர்கள் சிவகுமார், அழகுராஜன் ஆகியோர் வெளிநாடு செல்வதற்காக தலா ரூ.3 லட்சம் வீதம் கொடுத்தனர். மொத்தம் ரூ.12 லட்சம் பெற்றுக் கொண்ட கண்ணன் 5 ஆண்டுகளாகியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தார். இதை தொடர்ந்து கண்ணன் மற்றும் அவரது மகன்கள் சேகர், முத்துகுமார், சங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விகேபுரம் போலீசில் ராமகுரு உள்பட அனைவரும் புகார் செய்தனர்.
ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் எஸ்பியிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பிறகும் நடவடிக்கை இல்லாததால் அம்பை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். கோர்ட் உத்தரவுபடி விகேபுரம் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன், கண்ணன் மற்றும் அவரது மகன்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் கண்ணன் மோசடி செய்ததால் ராமகுரு, அவரது மகன் சதிஷ்குமார் இருவருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டது. மருமகன் மணிகண்டன் மனஉளைச்சளால் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.