காஞ்சிபுரம், ஈரோடு, திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்
சென்னை: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் ஈரோடு புறநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் எஸ்.கே.ஷேக்மைதீன், தலைமைக்கழக பேச்சாளர் எஸ்.என்.நஞ்சுண்டன், திருச்சி மாநகர் மாவட்ட மணிகண்டம் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான எம்.பழனிச்சாமி ஆகியோர் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க.வினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,
காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம் தாம்பரம் நகர அ.தி.மு.க. அவைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் டி.கே.எம்.சின்னய்யா, தாம்பரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் எல்லார்.செழியன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம் தாம்பரம் நகர அ.தி.மு.க. அவைத் தலைவர் பொறுப்பில் பி.ஆர்.சுரேஷ்குமார், தாம்பரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் டி.கே.எம்.சின்னய்யா (தாம்பரம் நகர மன்ற கழக குழுத் தலைவர்) தாம்பரம் நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் எல்லார் செழியன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
வேலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராக ஆர்.பிரதாப்குமார் நியமிக்கப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.