செஞ்சி அருகே 62 அரசு இலவச கலர் டிவிக்கள் தீவைத்து எரிப்பு
செஞ்சி: செஞ்சி அருகே பொதுமக்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அரசு இலவச கலர் டிவிக்களுக்கு தீவைக்கப்பட்டன. இதில் 62 டிவி பெட்டிகள் கருகி சாம்பலாயின.
விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது செவலபுரை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 1,359 இலவச கலர் டி.வி.க்கள் வரவழைக்கப்பட்டன. இதில் 1,226 டி.வி.க்கள் வழங்கப்பட்டு விட்டன.
மீதம் இருந்த 133 இலவச கலர் டி.வி.க்கள் செவலபுரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் ஒரு அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம மனிதர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த இலவச கலர் டி.வி.க்கள் வெடித்து சிதறின. இதை பற்றி தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 62 டி.வி.க்கள், அலுவலக கம்ப்iட்டர், மற்றும் 9 பிளாஸ்டிக் நாற்காலிகள் ஆகியவையும் தீயில் எரிந்து நாசமானது.
இந்த தீ வைப்பு சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ வைத்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.