1 ரூபாய் அரிசியே செங்கோட்டை மாணவிகள் வாந்திக்கு காரணம் - முன்னாள் அமைச்சர் தாக்கு
செங்கோட்டை : 1 ரூபாய் ரேசன் அரிசியே மாணவிகள் உடல்நலபாதிப்புக்கு காரணம் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் கருப்பசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
செங்கோட்டை அரசு ஆதி திராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி படிக்கும் 8 பிளஸ் டூ மாணவிகள் கடந்த 4ம் தேதி சாப்பிட்ட மதிய உணவு காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவனையில் சிகி்ச்சை பெற்று வருகின்றனர்.
இம்மாணவிகளை ஆதி திராவிடர் நலத்துறையின் முன்னாள் அமைச்சரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி, புறநகர் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன் உள்பட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நேரில் சென்று பார்வையிட்டு உடல் நலம் விசாரித்தனர். மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் ஆதி திராவிடர் நலத்துறை விடுதிக்கு சென்று அங்கு அனைத்து அறைகளையும் பார்வையிட்டனர். அரிசி, காய்கறி, சமையல் கூடம், குடிநீர் போன்றவைகளையும் ஆய்வு செய்த பின்னர் முன்னாள் அமைச்சர் கருப்பசாமி நிருபர்களிடம் பேசுகையில்,
உணவு மூலம்தான் இந்த 8 மாணவிகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தரமில்லாத 1 ரூபாய் அரிசியை சமைத்து போடுவதாலும், தரமில்லாத காய்கறிகள், குடிநீர் வசதி எதுவுமே சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதை உடனடியாக சரி செய்யாவிட்டால் அதி்முக பொது செயலாளர் ஆசியுடன் போராட்டம் நடத்தப்படும் என்றார்.