போர்க்குற்றம் குறித்து சாட்சியம் அளித்தால் பொன்சேகாவை தூக்கிலிடுவோம் -கோத்தபயா
இலங்கையில் அதிபர் தேர்தல்முடிந்ததும் பொன்சேகாவைப் பிடித்து சிறையில் அடைத்து விட்டனர். ராணுவக் காவலில் தற்போது அடைபட்டுள்ளார் பொன்சேகா. அவரை ராணுவ கோர்ட் அமைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பொன்சேகா எம்.பி. ஆனார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு ரகசிய தொலைபேசி பேட்டியில், போர்க்குற்றம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிடுவேன் என கூறியிருந்தார்.
இதுகுறித்து கோத்தபயா கூறுகையில், பொன்சேகா தொடர்ந்து அரசுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். பொன்சேகா அவ்வாறு எதையும் கூற முடியாது. ராணுவ தளபதியாக இருந்த அவர் போர் பற்றிய தகவல்களை கூறுவது ராஜ துரோகம். அப்படி தகவல் எதையாவது வெளிப்படுத்தினால் பொன்சேகா தூக்கில் போட்டுக் கொல்லப்படுவார். போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்படாது என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
முன்னதாக பொன்சேகா அளித்த பேட்டியில், விடுதலைப்புலிகளுடனான போரின்போது கடைசிக் கட்டத்தில் சரண் அடைய வந்த விடுதலைப்புலிகள் தலைவர்களையும், விடுதலைப்புலிகளையும் கோத்தபயா ராஜபக்சே சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதை கண்ணால் பார்த்த சாட்சி ஒருவர் வெளிநாட்டில் ரகசிய இடத்தில் பதுங்கி இருக்கிறார்.
சுதந்திரமான விசாரணை நடைப்பெற்றால் எதையும் மறைக்காமல் விடுதலைப்புலிகள் உடனான போர்க்குற்றம் தொடர்பாக பகிரங்கப்படுத்த தயாராக உள்ளதாக கூறியிருந்தார்.
இதற்குத்தான் கோத்தபயா ஆத்திரத்தைக் கொட்டி பேட்டி அளித்துள்ளார்.