கனடாவுடனும் இந்தியா அணு சக்தி ஒப்பந்தம்
டொரண்டோ: டொரண்டோவில் ஜி-20 உச்சி மாநாடு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவிருக்கிறார். இம்மாநாட்டின்போது இரு நாடுகளுக்கிடையான அணு சக்தி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் வரும் 26ம் தேதி கனடா செல்கிறார். அவருடன் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா, வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் செல்கின்றனர்.
இந்தியா ஏற்கனவே அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளுடன் அணு ஒப்பந்தம் செய்துள்ளது.
யுரேனியம் ஏற்றுமதியில் உலகிலேயே கனடா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் அணு உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிந்துவிட்டது. ஒப்பந்தம் மட்டும் தான் கையெழுத்தாக வேண்டியுள்ளது.
பிரதமர் காஷ்மீர் பயணம்-திருப்பி விடப்பட்ட விமானங்கள்:
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீர் சென்றார். தனது வீட்டில் இருந்து காலை 10 மணிக்கு அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். பிறகு அங்கிருந்து விமானத்தில் ஸ்ரீநகர் சென்றார்.
பிரதமரின்ர் பயணத்தை முன்னிட்டு சுமார் 45 நிமிடங்கள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. எந்த விமானமும் புறப்பட்டுச் செல்லவோ, தரையிறங்கவோ அனுமதிக்கப்படவில்லை.
இந்த நேரத்தில் டெல்லி விமான நிலையத்துக்கு வந்த 27 விமானங்களில் 7 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், அமிர்தசரசுக்கும் திருப்பி விடப்பட்டன.
மேலும் 20 விமானங்கள் 1 மணி நேரம் வானிலேயே வட்டமடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.
செல்போன்கள் இயக்கம் நிறுத்தம்:
பிரதமர் காஷ்மீரில் தரையிறங்கவுடன் மாநிலம் முழுவதும் அனைத்து செல்போன்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டன. பாதுகாப்பை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ராணுவத்தை வாபஸ் பெற கோரிக்கை:
இந் நிலையில் இன்று பிரதமரை சந்தித்த பல்வேறு கட்சியினரும் காஷ்மீரில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.