தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் திலகவதி டிஜிபியாகிறார்
தற்போது பொருளாதாரக் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்து வருகிறார் திலகவதி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக லத்திகா சரண் பணியாற்றி வருகிறார். இவர் தவிர டிஜிபி அந்தஸ்தில்,தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக என்.பாலசந்திரனும், தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனராக ஆர்.நடராஜூம், ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக மத்திய அரசு பணியில் கே.விஜயகுமாரும், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக போலோநாத்தும் பணிபுரிகிறார்கள்.
இவர்களில் போலீஸ் பயிற்சி டிஜிபியாக இருந்து வந்த பாலச்சந்திரன் கடந்த 31ம்தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து டிஜிபி பதவி காலியாகியுள்ளது. இந்த இடத்திற்குத்தான் திலகவதி நியமிக்கப்படவுள்ளார்.
தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை உடையவர் திலகவதி. காவல்துறை அதிகாரியாக மட்டுமல்லாமல் நல்ல எழுத்தாளராகவும் சிறப்பு பெற்றவர் திலகவதி. பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் திகழ்கிறார்.