உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி!-சிரஞ்சீவி
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான சிரஞ்சீவி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க, பிரஜா ராஜ்ய கட்சித் தலைவர் சிரஞ்சீவி மே 29ம் தேதி அன்று டெல்லியில் சந்தித்தார்.
அப்போது, மேல்-சபை தேர்தலில் பிரஜா ராஜ்யம் கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அளிக்குமாறு சிரஞ்சீவியிடம் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். அதை சிரஞ்சீவியும் ஏற்றார். அதன் விளைவாக ராஜ்யசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதற்கு பிரதிபலனாக சிரஞ்சீவி கட்சியுடன் கூட்டணி வைக்கிறது காங்கிரஸ்.
ஆந்திராவில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக சிரஞ்சீவி அறிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இருந்தாலும், மக்கள் பிரச்சனைக்காக ஆளும் கட்சியை எதிர்த்து போராடும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார்.