மும்பை தாக்குதல்-ஐஎஸ்ஐ தான் நடத்தியது: ஹெட்லி வாக்குமூலம்
சிகாகோவில் முகாமிட்டுள்ள இந்திய விசாரணையாளர் குழு ஹெட்லியை விசாரித்து வருகிறது. விசாரணைக்கு ஹெட்லி முழுமையாக ஒத்துழைப்பு தராத நிலையில், தற்போது ஐஎஸ்ஐக்கும், மும்பைத் தாக்குதலுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த முக்கியத் தகவல்கள் சிலவற்றை ஹெட்லி இந்தியக் குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழு ஹெட்லியை விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு ஹெட்லி சரிவர ஒத்துழைப்பு தரவில்லை என்று முன்பு செய்திகள் கூறின.
இந்த விசாரணையின் முன்னேற்றம் குறித்து இந்தியத் தரப்பு தகவல்கள் கூறுகையில், இது கிரிக்கெட் அல்ல, பால் பை பால் கமென்ட்ரி தருவதற்கு. விசாரணை நடந்து வருகிறது. முன்னேற்றப் பாதையில் செல்கிறது.
மும்பை சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு உள்ள தொடர்புகள் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கும் வரை விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவின் டைம்ஸ் நியூஸ் நெட்வொர்க் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் ஐஎஸ்ஐக்கு நேரடியாக உள்ள தொடர்பு குறித்த முக்கியத் தகவலை ஹெட்லி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்ஐஏ தரப்பி்ல கூறியதாக அந்த செய்தி கூறியுள்ளவற்றில், மும்பை சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியது ஐஎஸ்ஐதான் என்பதற்கான முக்கியத் தகவல் கிடைத்துள்ளது.
தாக்குதல் முடிவடைந்ததும், இந்தப் பழியை அல் கொய்தா மீது சுமத்த முயன்றது ஐஎஸ்ஐ. இதற்காக லஷ்கர் இ தொய்பாவின் உதவியை அது நாடியது. ஆனால் அதற்கு லஷ்கர் அமைப்பு ஒத்துழைக்கவில்லை. அப்படிச் செய்தால், தனக்கு தேவையான நிதியுதவியும், ஆளெடுப்பு பணிகளும் பாதிக்கப்படும் என பயந்தது லஷ்கர் என்று ஹெட்லி மூலம் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் அதிகாரியான ஷேக் அப்துல் ரஹ்மான் சயீத் மற்றும் சாஜித் மிர் ஆகியோர்தான், ஹெட்லி, ராணா உள்ளிட்ட அமெரிக்காவிலிருந்து செயல்பட்டு வரும் தீவிரவாதிகளை கையாள்பவர்கள் என்ற இன்னொரு தகவலும் கிடைத்துள்ளதாம்.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி ஐஎஸ்ஐதான் மும்பை தாக்குதல் சம்பவத்தில் மிக முக்கியப் பங்கு வகித்திருப்பதாக உறுதியாகி வருகிறது.