வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்-தமிழகத்தில் மழை வலுக்கும்
கேரளாவிலும், தமிழகத்தின் கேரளாவையொட்டியுள்ள பகுதிகளிலும் தென் மேற்குப் பருவ மழை வலுத்துள்ளது. கர்நாடகத்திலும் மழை தொடங்கி பெய்து வருகிறது.
சில நாட்களுக்கு முன் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டது. இதனால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மழை மேலும் வலுக்கும் எனத் தெரிகிறது..
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத் தகவல் கூறுகையில்,
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும், பல இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்யும். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடைந்தால் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். மாநிலத்தின் உள்பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சென்னை நகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம். பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.