பேரணி ரயில் பாதை தகர்ப்பு-ப.சிதம்பரத்துக்கு வைக்கப்பட்ட குறியா?
விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையத்தில் ரயில் பாதை, தகர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜபக்சே வருகையைக் கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புகள் இதைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறி வைத்தே இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
காரைக்குடியில் இன்று நடைபெறும் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பேசுவதற்காக எழும்பூரிலிருந்து நேற்று இரவு கிளம்பிய மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் திருச்சி வருவதாக இருந்தார்.
ஆனால் டெல்லியிலிருந்து ப.சிதம்பரம் பயணித்த விமானம் தாமதமானதால், அவரால் மலைக்கோட்டை ரயிலைப் பிடிக்க முடியவில்லை. இதனால், தனது சென்னை வீட்டில் தங்கினார்.
ப.சிதம்பரம் பயணிக்கவிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறி வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டிருப்பதால், இது ப.சிதம்பரத்திற்கு வைக்கப்பட்ட குறியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து சிதம்பரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே,நேற்று திருச்சி போக முடியாத ப.சிதம்பரம் இன்று காலை விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் காரைக்குடி புறப்பட்டுச் சென்றார்.