பெரும் பலத்துடன் மீண்டும் தொலைத்தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் நிறுவனம்!
உள்ளங்கையில் உலகம் என்ற பஞ்ச் லைனுடன் தொலைத் தொடர்புத்துறையில் அடியெடுத்து வைத்த ரிலையன்ஸ் நிறுவனம், பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது. பின்னர் தம்பி அனில் அம்பானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாகப்பிரிவினை ஏற்பட, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அனில் வசம் போய்விட்டது.
அத்துடன், ஒருவரது வர்த்தகத்தில் மற்றவர் குறுக்கிடக் கூடாது என்ற குடும்ப ஒப்பந்தம் இருந்ததால், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் இறங்காமல் இருந்துவந்தது.
சமீபத்தில் கேஜி எரிவாயு தொடர்பான வழக்கின் தீர்ப்பு, அண்ணன் - தம்பிக்கிடையிலான சண்டைக்கு முடிவு கட்டியது. இப்போது குடும்ப ஒப்பந்தத்தை கிழித்துப் போட்டுவிட்டு, விரும்பிய தொழிலில் விருப்பம் போல் ஈடுபடலாம் என்ற புதிய ஒப்பந்தத்தை முகேஷும் அனிலும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த இணக்கமான சூழலில் மீண்டும் தொலைத் தொடர்புத் துறையில் கால்பதிக்கிறது முகேஷின் ரிலையன்ஸ்.
இதன் முதல் கட்டமாக இன்போடெல் நிறுவனத்தின் 95 சதவிகிதப் பங்குகளை ரூ 4800 கோடிக்கு வாங்கியுள்ளார் முகேஷ்.
சமீபத்தில் நடந்த 3 ஜி பிராட்பேண்ட் ஏலத்தில் 22 பகுதிகளுக்கான உரிமத்தை ஏலத்தில் வென்றுள்ளது இன்போ டெல். அதே நேரம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இந்த ஏலத்திலிருந்து வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், நாட்டின் பெரும்பகுதி பிராட்பேண்ட் சேவை தரும் உரிமம் இன்போடெல் நிறுவனம் மூலம் முகேஷுக்குக் கிடைத்துள்ளது. எனவே செல்போன் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு தருவதில் பெரும் பலத்துடன் நுழையவிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.
மேலும் அடுத்து வரவிருக்கிற 4ஜி ஸ்பெக்ட்ரம் தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான முயற்சிகளிலும் ரிலையன்ஸ் தீவிரமாக உள்ளது.
இதுகுறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், "இந்திய பொருளாதாரம் டிஜிட்டல் துறையில் பெரும் முன்னேற்றம் காணவும், வாடிக்கையாளர்கள் பெரும் திருப்தியுடன் பிராட்பேண்ட் சேவைகளைப் பெறவும் வழிவகுக்கும்" என்றார்.
இந்த எதிர்ப்பார்ப்பு காரணமாக, ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் கடந்த வெள்ளியன்று 3 சதவிகிதம் உயர்ந்தன. நாளை இன்னும் உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.