இந்தியப் பொருளாதாரம் 2 ஆண்டுகளில் 10 சதவீத வளர்ச்சியை எட்டும்-பிரணாப்
கொல்கத்தாவில் தனியார் வங்கியான எஸ் வங்கியின் பத்து கிளைகளை பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது ஒரே ஆசை இந்தியாவின் பொருளாதாரம் முடிவே இல்லாமல் வளர்ந்து கொண்டு போக வேண்டும் என்பதுதான். நாம் அடுத்த 2 ஆண்டுகளில் 10 சதவீத வளர்ச்சியை எட்டுவது உறுதி. இதை நான் உறுதியாகவே சொல்கிறேன்.
வங்கித் துறை கடந்த சில வருடங்களாக பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருவதாலும், இதேபோல பிற துறைகளிலும் நல்ல முன்னேற்றங்கள் பெருகி வருவதாலும் இது சாத்தியமாகும்.
10 சதவீதம் மட்டுமல்லாமல் 20 சதவீத வளர்ச்சியை கூட இந்தியா எட்டும்நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியப் பொருளாதாரத்தின் அசைக்க முடியாத பலம் காரணமாக இது சாத்தியமாவது நிச்சயம்.
1951 முதல் 79 வரை இந்திய பொருளாதாரம் வெறும்3.5 சதவீதமாகவே இருந்தது. இது 80களில் 5.2 சதவீதமாக உயர்ந்தது. 8வது திட்ட காலமான 91-96ல் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது. தற்போதைய 11வது திட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருந்தது. வரும் நிதியாண்டில் இது 9 சதவீதமாக உயரப் போகிறது.
எனவே 10, 20 என இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயருவதற்கான சாத்தியக்கூறுகளை நாம்மறுக்க முடியாது. ஆங்காங்கே சிறு சிறு தடங்கல்கள் ஏற்படலாம். ஆனால் நமது வளர்ச்சியில் நிச்சயம் சறுக்கல் வராது.
பொருளாதார வளர்ச்சியின் மூலம் வேகமான வளர்ச்சியை மட்டுமல்லாமல், பெருமளவிலான வேலை வாய்ப்புகளையும் நாம் உருவாக்க முடியும் என்றார் பிரணாப்.