கொல்லத்தில் பெங்களூர் போலீஸ்-மதானி எந்த நேரத்திலும் கைது
பெங்களூரில் கடந்த 2009ம் ஆண்டு 9 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் வங்கதேசத்தை சேர்ந்த நசீர், உள்ளிட்ட 2 பேர் பிடிப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேராளவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி இந்த வழக்கின் போலீசார் தாக்கல் செய்த இடைக்கால குற்றப் பத்திரிக்கையில் மதானியை 31வது குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
இதையடுத்து கர்நாடக போலீசார் மதானியை கைது செய்ய வாரண்டுடன் கொல்லம் வந்துள்ளனர். அவர் இன்று அல்லது நாளைக்குள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
மதானியை கைது செய்ய கர்நாடக போலீசார் கொல்லம் வந்துள்ள தகவலை அறிந்த அவரது கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லம் அன்வர்சேரியிலுள்ள மதானி வீட்டு முன்பு குவிந்துள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இதைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கேரளா முழுவதுமே அசம்பாதவிங்கள் நடக்காத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூர் செசன்சு நீதிமன்றத்தில் மதானிக்கு முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் அக்பர் அலி இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
மதானியை கைது செய்ய உதவுவோம்-கேரள அரசு:
இதற்கிடையே பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானியை கைது செய்ய கர்நாடக போலீசாருக்கு கேரள அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கேரள உள்துறை அமைச்சர் கோடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், மதானி பெங்களூர் குண்டுவெடிப்பபு வழக்கில் குற்றவாளியாக சேர்த்தது பற்றி பெங்களூர் போலீசார் கேரள அரசுக்கு இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. அவரை கைது செய்ய பெங்களூர் போலீசார் கேரள அரசை நாடினால் அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றார்.
ஏற்கனவே கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பல வருடம் சிறையில் இருந்தார் மதானி. சமீபத்தி்ல் தான் இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.