கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் வழிபாடு செய்யும் போராட்டம்-நெடுமாறன் கைது
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கருவறைக்குள் நுழைந்து வழிபாடு நடத்த முயலும் போராட்டத்தை நடத்திய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.
கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தை பக்தர்கள் தொட்ட வழிபட அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்மானத் தமிழர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கோவிலிலும், கோவிலுக்கு வெளியேயும் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலையில், தமிழ் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் ராமச்சந்திரன் தலைமையில் கபாலீஸ்வரர் கோவில் முன்பு போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தெய்வநாயகம் முன்னிலை வகித்தார். பழ.நெடுமாறன் வாழ்த்துரை வழங்கினார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
பின்னர் கோவிலுக்குள் நுழைந்து கருவறைக்குள் புகுந்து வழிபாடு நடத்த போராட்டக் குழுவினர் முயன்றனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் தடுத்தனர். அப்போது அங்கு பலத்த வாக்குவாதம் மூண்டது.
இதையடுத்து நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.