ஜூலை 5 முதல் பொறியியல் பொது கவுன்சிலிங் தொடக்கம்
சென்னை: ஜூலை 5ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 454 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 25 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர்களை சேர்க்கவே இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
கவுன்சிலிங் தொடங்குவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில்,
மாணவர்கள் கவுன்சிலிங்கின்போது கல்லூரியை, பிரிவை தேர்ந்து எடுக்கும் போது இருமாணவர் ஒரே கட் ஆப் எடுத்திருந்தால் முதலில் யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பதை முடிவு செய்ய ஒவ்வொரு மாணவருக்கும் கம்ப்யூட்டர் மூலம் ஒரு நம்பர் கொடுக்கப்படும். இது ரேண்டம் நம்பர் ஆகும். இந்த ரேண்டம் நம்பர் வருகிற 15-ந் தேதி கொடுக்கப்பட உள்ளது. விண்ணப்பித்த மாணவர்களின் கட் ஆப் மார்க் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ரேங்க் பட்டியல் 20-ந் தேதிக்குள் வெளியிடப்பட இருந்தது. ஆனால் 18-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
21 மற்றும் 22-ந் தேதிகளில் விளையாட்டு இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்படும். விளையாட்டு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 28-ந் தேதி தொடங்குகிறது. பிளஸ்-2 படிப்பில் தொழில்கல்வி எடுத்து படித்த மாணவர்களுக்கு 29, 30 மற்றும் ஜுலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் 5 நாட்கள் நடைபெற உள்ளது.
ஜுலை 5-ந் தேதி பொது கவுன்சிலிங் தொடங்குகிறது. இந்த கவுன்சிலிங் ஒரு மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.