வாரன் ஆன்டர்சனை விடுவித்த விவகாரம்-அர்ஜூன்சிங் மீது வழக்கு
1984ம் ஆண்டு போபால் விஷ வாயு கசிவு ஏற்பட்டதும் ஆன்டர்சன் கைது செய்யப்பட்டார். ஆனால் சில நாட்களிலேயே ஆன்டர்சனை மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் உத்தரவின் பேரில் விடுதலை செய்து விட்டனர்.
இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ராஜீவ் காந்தி, பி.வி.நரசிம்மராவ் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
விவகாரம் பெரிதாகி வரும் நிலையில் இதுகுறித்து இதுவரைஅர்ஜூன் சிங் பதிலளிக்காமல் உள்ளார்.
இந்த நிலையில், அர்ஜூன் சிங், அப்போதைய போபால் கலெக்டர் மோதி சிங், அப்போதைய எஸ்.பி. ஸ்வராஜ் பூரி ஆகியோர் மீது தனித் தனியாக போபால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து வக்கீல் பர்கான் கான் என்பவர் தலைமை நீதித்துறை நடுவர் ஆர்.ஜி. சிங்கிடம் தாக்கல் செய்த மனுவில், வாரன் ஆன்டர்சனை விடுவித்த நடவடிக்கை தவறானது. இதற்காக அர்ஜூன்சிங் மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்த வழக்கு ஜூன் 29ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.