மத்திய அரசை ஈழத் தமிழர் எதிர்ப்பு நிலையை கைவிட வேண்டும்-பாஜக
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
தமிழர் ஒருவரை தமிழ்நாட்டிலேயே சுட்டுக் கொன்ற குற்றவாளி டக்ளஸ் தேவானந்தாவை மத்திய அரசு தப்பிக்க வைத்து, கொழும்பு அனுப்பியது.
தமிழக காவல் துறை தலைவர் லத்திகா சரண், டக்ளஸ் தேவானந்தாவை பற்றிய தகவலை டெல்லிக்கு அனுப்பப்பியதாக கூறியிருக்கிறார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமோ அதை மறுத்திருக்கிறார்.
டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அவருடன் பிரதமர் மன்மோகன் சிங் கை குலுக்கியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா ஒரு குற்றவாளி எனத் தெரிந்தும், தீர்ப்பு வந்த பிறகு பார்க்கலாம் என்று ப.சிதம்பரம் கூறுவது, கண்டனத்துக்குரியது.
மத்திய அரசும், தமிழ்நாட்டிலிருந்து சென்ற எம்.பி. களும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி சிறிதும் கவலைப்படுவது இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போகும் மத்திய அரசு, தமிழர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி அளிக்க இருப்பதாக கூறியுள்ளது.
எற்கனவே அளிக்கப்பட்ட ரூ.1000 கோடி, தமிழர்களுக்குத்தான் செலவிடப்பட்டதா என்று தெரியவில்லை. அதை அறிய மத்திய அரசும் முயலவில்லை.
மத்திய அரசின் தமிழர் எதிர்ப்பு நிலை கண்டிக்கத்தக்கது. இதை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இப் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி கண்டும் காணாமல் இருப்பது நன்றன்று. அவர் உடனே இதில் தலையிட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.