டெல்லியில் ஜாதி விட்டுக் காதலித்த காதல் ஜோடி கௌரவ கொலை!
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஜாதி மாறி காதலித்ததற்காக ஓர் இளம் ஜோடியை குடும்பத்தாரே கெளரவத்தைக் காக்க கொலை செய்துள்ள கொடுமை நடந்துள்ளது.
டெல்லியில் திங்கட்கிழமை அன்று 19 வயது பெண்ணும் 21 வயது ஆணும் காதலித்ததற்காக பெண்ணின் குடும்பத்தாரால் மணிக்கணக்கில் இரும்புக் கம்பியால் அடித்து, சித்ரவதை செய்யப்பட்டனர். இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிப்பவரான கிரன் தேவி கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 11.30 மணியளவில் காதல் ஜோடியை பெண் குடும்பத்தார் ஸ்வரூப் நகரில் உள்ள வீட்டிற்கு இழுத்து வந்தனர். அப்பெண் கதறுவது விடியற்காலை 3 மணி வரை கேட்டது. தன் காதலனின் உயிரை காப்பாற்ற அவள் எவ்வளவோ கெஞ்சியும் அவள் பெற்றோரும் உறவினர்களும் கேட்கவே இல்லை என்று கூறினார்.
அன்டை வீட்டாரின் குறுக்கிடலோ, அப்பெண்ணின் கதறலோ அந்த கொலைகாரர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றார்.
இந்த இரட்டைக் கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கொலையான ஆஷா சைனி தன் காதலன் யோகேஷுடன் வீட்டை விட்டு ஓடிப் போக திட்டமிட்டிருந்திருக்கிறார். யோகேஷ் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக இரண்டு உயிர்களை பலி கொடுத்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.