சட்டசபையில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்ய வேண்டும்- மத்திய அமைச்சர் காந்திசெல்வன்
நாமக்கல்: வருகிற சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுகவே வெல்ல வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் சட்டசபையில் ஒரு எதிர்க்கட்சி கூட இல்லாமல் செய்ய வேண்டும் என மத்திய திமுக அமைச்சர் காந்தி செல்வன் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு காந்திசெல்வன் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று தமிழகத்திலேயே முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும்.
அதேபோல தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும். இதன் மூலம் சட்டசபையில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்ய முடியும்.
நாம் இதுவரை 13 இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம். எனவே வேலைப்பாடுகள் அனைத்தும் நமக்கு அத்துப்படியாகும். இப்போது முதலே தேர்தல் பணிகளை திமுகவினர் தொடங்கிட வேண்டும் என்றார் காந்திசெல்வன்.