பெங்களூர் குண்டு வெடிப்பு: மதானியை கைது செய்ய வாரண்ட்-கொல்லத்தில் 2 தொண்டர்கள் தீக்குளிப்பு
கொல்லம்:
பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானியை கைது செய்ய பெங்களூர் கோர்ட் வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், கொல்லத்தில் மதானி கட்சியைச் சேர்ந்த 2 பேர் தீக்குளித்து விட்டனர்.
பெங்களூரில் கடந்த 2008ம் ஆண்டு 9 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் கேரள ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் மதானிக்கு தொடர்பு இருப்பது காவல்துறைக்கு தெரிய வந்ததை தொடர்ந்து அவரை இவ்வழக்கில் 31வது குற்றவாளியாக சேர்த்து பெங்களூர் மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் இடைக்கால குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் குரிஜி மதானியைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை பிறப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கொல்லம், அன்வர்சேரியிலுள்ள மதானி வீட்டு முன்பு ஆயிரக்கணக்கான் தொண்டர்களும், 8க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கலும் நிறுத்தப்பட்டு பரபரப்புடன் அப்பகுதி உள்ளது.
எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்பதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அவரது கட்சி தொண்டர்கள் மதானியை உயிரை கொடுத்து காப்பாற்றுவோம் என்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மதானியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சி தொண்டர்கள் மயிலாகபள்ளியை சேர்ந்த நவ்ஷாத், செரிப் ஆகியோர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திரண்டிருந்த தொண்டர்கள் 2 பேரையும் காப்பாற்றி ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரச சிகிச்சை அளித்ததில் இரண்டு பேரும் உயிர் தப்பிவிட்டனர்.
இந்த சம்பவத்தால் தொடர்ந்து கொல்லத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று பெங்களூர் கோர்ட்டில், , கூடுதல் குற்றப்பத்திரிக்கையை போலீஸார் தாக்கல் செய்தனர். அதில் 31வது குற்றவாளியாக மதானியை சேர்த்துள்ளனர்.
லஷ்கர் இ தொய்பாவின் தென்னிந்திய கமாண்டராக வர்ணிக்கப்படும் நசீர் என்பவருடன் இணைந்து மதானி செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் நசீர்தான் முதன்மைக் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸாரிடம் நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், தான் மதானியை 2008ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி சந்தித்ததாகவும், குண்டுவெடிப்பு தொடர்பாக விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது ஜூன் 23ம் தேதிக்குள் மதானியைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு பெங்களூர் கோர்ட் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.